சென்னை: சென்னையில் உள்ள வி.ஐ.டி பல்கலையில் அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி என்ற புதிய வசதியை இந்தியாவுக்கான மியான்மர் தூதர் மோ கியாவ் ஆங் திறந்துவைத்தார். சென்னையில் உள்ள வி.ஐ.டி பல்கலையில் அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி என்ற புதிய வசதி தொடக்க விழா கடந்த 12ம் தேதி நடந்தது. இந்த தொடக்க விழாவின் போது இந்தியாவுக்கான மியான்மர் தூதர் மோ கியாவ் ஆங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி வசதியை துவங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் வி.ஐ.டி துணை தலைவர் சேகர் விசுவநாதன் கூறியதாவது: இந்தியா-மியான்மர் இடையேயான தொடர்பு நீண்ட நெடுய வரலாறு கொண்டது. வி.ஐ.டி தர வரிசைகளில் முன்னணியில் இருப்பதற்கு ஆராய்ச்சியில் மாணவர்களும், பேராசிரியர்களும் சிறந்து விளங்குவது முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் வி.ஐ.டியில் செய்து தரப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது அறிவாற்றலை வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து இந்தியாவுக்கான மியான்மர் தூதர் மோ கியாவ் ஆங் கூறியதாவது: இந்தியா-மியான்மர் இடையேயான உறவு என்பது 75 ஆண்டு கால நீண்ட பாரம்பரியம் கொண்டது. இரு நாடுகள் பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. மியான்மர்- வி.ஐ.டி இணைந்து கல்வி துறையில் மேலும் வளர்ச்சியை அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், வி.ஐ.டி துணை தலைவர் சேகர் விசுவநாதன், மியான்மர் கவுரவ தூதர் பேராசிரியர் ரங்கநாதன், வி.ஐ.டி சென்னையின் இணை துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.