குலசேகரம் : தூத்துக்குடி மாவட்டம் வி.இ.ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். வியாபாரி. அவரது மகள் சுகிர்தா (27). கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். பெண்கள் விடுதியில் தங்கி இருந்தவர் கடந்த அக்டோபர் 5ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மரணத்துக்கு முன்பு சுகிர்தா எழுதிய கடிதத்தில், டாக்டர்கள் பரமசிவன், ஹரீஸ், பிரீத்தி ஆகியோர் தன்னை துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சுகிர்தாவின் தந்தை சிவகுமார் குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மாணவி குறிப்பிட்டிருந்த டாக்டர்கள் பரமசிவன், ஹரீஸ், பிரீத்தி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே டாக்டர் ஹரீஸ் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜாரகுமாறு ஹரீசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை அதிகாரி தரப்பில் கூறுகையில், சென்னையில் இருக்கும் ஹரீசுக்கு சம்மன் அனுப்பி உள்ளோம். அவர் தற்போது வேலை விஷயமாக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், விரைவில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.
இதற்கிடையே குமரி முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 10க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் குலசேகரம் பகுதி முழுவதும் கண்டன போஸ்டர்களை ஓட்டி உள்ளனர்.