காரைக்கால்: காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத் திட்டத்தை அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, தூத்துக்குடியில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை 32-ஐ விரிவுபடுத்தும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் செயல்படுத்தி வருகிறது. சென்னை, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய 3 துறைமுகங்களை இணைப்பதுடன் கடலோர மாவட்டங்களில் போக்குவரத்தை மேம்படுத்தும் இத்திட்ட பணிகள் பல்வேறு பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விழுப்புரம், சிதம்பரம் இடையிலான இத்திட்ட பணிகள் 65% முடிவடைந்து விட்ட நிலையில் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் வரை வெறும் 17% மட்டுமே முடிந்துள்ளது. ரூ.2,662 கோடி மதிப்பீட்டிலான சாலை விரிவாக்க பணிகள், நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திட்டத்தை முடிக்கும் வகையில் கடந்த மாதம் முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.