அமிர்தசரஸ்: ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் தாயை அரை நிர்வாணமாக இழுத்து சென்ற கும்பல் திருமணமான இளம்பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப்பை சேர்ந்த ஒரு இளைஞர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். அதனால் ஆவேசமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் சிலர், இளைஞரின் வீட்டிற்கு வந்தனர். அப்போது அந்த வீட்டில் இளைஞரின் 55 வயதுடைய தாய் மட்டுமே இருந்தார். கும்பலாக வந்த அவர்கள், திடீரென அந்தப் பெண்ணை தாக்கினர். பின்னர் அவரது ஆடைகளை களைத்து இழுத்து சென்றனர். அரை நிர்வாணமாக தெருக்களில் அழைத்து சென்று தாக்கினர். இதனை அப்பகுதியினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எவரும் தடுக்கவில்லை.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி சுனிதா பாவா கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன், அதேபகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்டார். அதனால் ஆவேசமடைந்த திருமணமான பெண்ணின் குடும்பத்தினர், வீட்டில் தனியாக இளைஞரின் தாயை அடித்து துன்புறுத்தி அரை நிர்வாண நிலையில் வீதியில் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தில் திருமணமான பெண்ணின் தாய் குல்விந்தர் கவுர் மணி, அவரது சகோதரர்கள் ஷரஞ்சித் சிங் ஷானி, குர்சரண் சிங், குடும்ப நண்பரான சன்னி சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகிறோம்’ என்றார்.