புதுடெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்கள் அங்கு பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலையில் ஈடுபடுத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டது. மேலும் லாவோசில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் முயற்சிகள் நடந்தன. இந்நிலையில் லாவோசில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வௌியிட்ட பதிவில், ‘லாவோசில் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத வேலைகளில் சிக்கிய 17 இந்திய தொழிலாளர்கள், தாயகம் திரும்பியுள்ளனர். பிரச்னைக்கு தீர்வுகாண வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்ட லாவோசில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு பாராட்டுகள். இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஆதரவு அளித்த லாவோஸ் அதிகாரிகளுக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.