திருத்தணி,: திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் ஆந்திரா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டம், அண்ணா நகர் விஎம்எஸ் காலனியை சேர்ந்த மருதமுத்து என்பவரின் மகன் செந்தில்குமார்(39). உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8ம் தேதியில் இருந்து வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகப்படியாக குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று காலை நெடுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததை கண்ட வீட்டின் உரிமையாளர் கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செந்தில்குமார் மது பாட்டில்கள் சூழ்ந்து இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.