பெரம்பூர்: திருவள்ளுவர் மாவட்டம் சென்றாயன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல் (25). பெயின்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு, அயனாவரம் சோலை தெருவில் வசித்து வரும் தனது தாத்தா முனுசாமியை பார்க்க வந்துள்ளார். பின்னர், அங்கு மது அருந்திவிட்டு, போதையில் அயனாவரம் நியூ ஆவடி ரோடு வாட்டர் டேங்க் பஸ் நிறுத்தத்தில் உள்ள நடைமேடையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மீன்பாடி வண்டியில் அங்கு வந்த ஒருவர், பீர் பாட்டிலால் ராஜ்கமல் தலையில் சரமாரியாக அடித்துவிட்டு, அவர் கழுத்தில் கிடந்த தங்க செயின், வெள்ளிக்காப்பு மற்றும் ரூ2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினார்.
காயமடைந்த ராஜ்கமல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது தலையில் 12 தையல் போடப்பட்டது. பின்னர் இதுகுறித்து அயனாவரம் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில், அதே பகுதியில் மீன்பாடி வண்டி ஓட்டும் பால்பாண்டி (55) என்பவர், இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து தங்கச் செயின் மற்றும் வெள்ளிக்காப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.