சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த பிறகே ரயில் நிலையத்திற்குள் பயணிகளை அனுமதிக்கின்றனர். அதன்படி நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது நவஜீவன் விரைவு ரயிலில் பயணம் செய்ய வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜின்ஜிவா மாவட்டத்தைச் சேர்ந்த மஹேந்தர் சைனி (30) என்பவர் வைத்திருந்த கருப்பு நிற டிராலி பேக்கை சோதனை செய்ய முயன்றனர். போலீசாரிடம் பேக்கை திறந்து காட்டுவதற்கு சைனி தயங்கினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர் வைத்திருந்த பேக்கை திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் 2 கிலோ 680 கிராம் தங்க நகைகள், வைர கம்மல் மற்றும் வளையல்கள் இருந்தன. அதன் மொத்த மதிப்பு ரூ1.56 கோடி ஆகும். மேற்படி நகைகள் சம்பந்தமான ஆவணங்களை கேட்டபோது சைனி சரியாக பதில் சொல்லாததால், அவரையும், கைப்பற்றப்பட்ட நகைகளையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சைனி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நகை வியாபாரி என்பது தெரிய வந்தது. இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை சவுகார்பேட்டையில் மிகப்பெரிய தங்க மார்க்கெட் உள்ளது. இங்கு தங்க, வைர நகைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுகின்றன.
எனவே ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த சைனி, நகைகளை கொள்முதல் செய்துவிட்டு ராஜஸ்தானுக்கு புறப்பட்டபோது தான் ரயில்வே போலீசாரின் சோதனையில் சிக்கியுள்ளார். நகைகளுக்கான ஆவணங்கள் இல்லாததால்தான் அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.