தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் கீழ் 3 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அனகாபுத்தூர், பாரதிபுரம் மற்றும் குண்டுமேடு ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு மையத்தில் கால்நடை மருத்துவக்குழுவினரால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து 5 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு உடல் தகுதி பெற்ற பின் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு அதன்பிறகு பிடித்த இடத்திலேயே விடப்படுகிறது.
வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனைகள் பொதுஇடங்களுக்கு உரிமையாளர்களால் அழைத்து செல்லப்படுகிறது. இதற்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி கட்டாயமாக போடப்பட்டிருக்கவேண்டும். செல்லப் பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்படுவதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு அவசியம் உரிமம் பெற்றிடவேண்டும்.
தாம்பரம் மாநகராட்சியின் https://tcmcpublichealth.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 463 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். முதல்கட்டமாக 87 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாநகராட்சியின் கால்நடை மருத்துவர்- 8825791424 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். எனவே, செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் 20.6.2024க்குள் இணையதளம் மூலம் விண் ணப்பித்து தங்களது செல்லப்பிராணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து உரிமத்தை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தாம்பரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.