சென்னை: மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் காட்டமாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், இம்மண்ணில் தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் எதிராகக் காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. இந்த இழிசெயல்களைத் தங்களின் சாதிப் பெருமைகளென இவர்கள் நம்புவதுதான் இழிவினும் இழிவான பித்துக்குளித்தனமாகும்.
அப்பாவிகளை வதைத்துப் படுகொலை செய்வது, வாயில் மலம் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, குடிசைகளைக் கொளுத்துவது, உடைமைகளைச் சேதப்படுத்துவது, பெண்களை அம்மணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்செல்வது, கூட்டுப் பாலியல் வல்லுறவு கொள்வது, கொள்ளையடிப்பது, ஆணவக் கொலைகள் செய்வது என விவரிக்க இயலாத வன்கொடுமைகளைச் செய்து அவற்றை வீரதீர செயல்களெனப் போலியாய்க் கர்வம் கொள்வதுதான் இவர்களின் மரபணுக்களில் கொட்டமடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சமாகும் என்று பதிவிட்டுள்ளார்.