டெல்லி : இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பின் ரணில் விக்கிரமசிங்கே, முதன்முறையாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் வரவேற்றார். பின்னர் கற்பா நடனத்துடன் இலங்கை அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உரையாடினார். இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது 2 நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இலங்கை அதிபரை சந்திக்கும் போது கச்சத்தீவை மீட்பது மற்றும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளார். 2 நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வரும் நிலையில், இலங்கை அதிபரின் இந்த வருகையால் அந்த உறவு மேலும் வலுவடையும் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.