இம்பால்: வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, மணிப்பூரில் முக்கிய பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க நேற்று காலை 3 மணி நேரம் ஊடரங்கு தளர்த்தப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக மெய்டீஸ் மக்களுக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் பழங்குடி மக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து கடந்த 3ம் தேதி வன்முறை வெடித்தது. இதில் 54 பேர் பலியாயினர். வன்முறை பாதித்த பகுதியில் இருந்து 23,000 பேர் மீட்கப்பட்டு ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வன்முறையை தடுக்க மாநிலத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதை தொடர்ந்து தலைநகர் இம்பால் உள்ளிட்ட சில பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சாலைகளில் குவிந்தனர். கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன. சுராசந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப, பெட்ரோல் பங்குகள் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாநிலம் முழுவதும் 10,000 பாதுகாப்பு படையினர் மற்றும் அசாம் ரைபிள் படையினர் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ராணுவத்தினர் டிரோன் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாகவும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, மணிப்பூர் வன்முறை குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பாதிக்கப் பட்டவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
* புதிய தலைமை செயலாளர் நியமனம்
வன்முறையை தொடர் ந்து மணிப்பூர் பாஜ அரசு, ராஜேஷ் குமாருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக வினீத் ஜோஷியை நேற்று நியமித்தது. 1992ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான வினீத் ஜோஷி ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித்துறையில் கூடுதல் செயலாளராக பதவி வகித்து வந்தார்.