ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிகாரிகள் வராததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியத்தில் உள்ள செம்பேடு, கன்னிகைப்பேர், தாராட்சி, தொளவேடு, தும்பாக்கம், திருக்கண்டலம், வெங்கல், குருவாயல், கல்பட்டு, குமரப்பேட்டை, வடமதுரை, மாம்பல்லம், செங்கரை, செம்பேடு, கிளாம்பாக்கம், மஞ்சங்காரணை, பெரியபாளையம் போன்ற பகுதியில் பேவர் பிளாக் சாலை, குடிநீர் பைப்லைன், பள்ளிகளுக்கு கழிவறை கட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்ய ரூ.1 கோடியே 25 லட்சத்து 4 ஆயிரத்து 380 நிதி ஒதுக்கப்படுவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் குழந்தைவேலு, சரவணன் பேசியதாவது: கோடுவெளி கிராமத்தில் கட்டிமுடித்து 2 வருடமாக திறக்கப்படாமல் உள்ள துணை சுகாதார நிலையத்தை திறக்கவேண்டும். மேலும் கூட்டத்திற்கு சம்மந்தப்பட்டத்துறை அதிகாரிகள் ஏன் வரவில்லை? இதுகுறித்து கலெக்டருக்கு புகார் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து நாங்கள் பல கூட்டத்தில் தெரிவித்தும் நீங்களும் கண்டு கொள்ளவில்லை, எனவே இதை கண்டித்து நாங்கள் வெளி நடப்புசெய்கிறோம் என கூறி அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். இதில் கவுன்சிலர்கள் குணசேகரன், சுரேஷ், ரவி, சரவணன், குழந்தைவேலு, தட்சிணாமூர்த்தி, திருமலை, புஷ்பா, லதா, ஜமுனா, வித்யாலட்சுமி, ஜெயலட்சுமி, தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.