டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7வது நாளாக மணிப்பூர் விவகாரம் எதிரொலிக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக அவையின் அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த மறுத்ததால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர்.
திரிணாமுல் காங். எம்.பி.க்கு ஜெகதீப் தன்கர் கண்டனம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் நடத்தைக்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்தார். மாநிலங்களவையில் மேஜையை தட்டி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையை ஒத்திவைத்தார். டெரிக் ஓபிரையன் தினமும் நாடக பாணியில் செயல்படுவதாக மாநிலங்களவை தலைவர் விமர்சனம் செய்தார். தினசரி தொடரும் இத்தகைய நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் வருத்தம் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கப்படும் என அவை தலைவர் குறிப்பிட்டார். சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடும் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.