திருச்சி: ரமலான் பண்டிகையையொட்டி ஆடுகள் விலை அதிகரித்திருந்த போதிலும் வியாபாரிகள் அவற்றை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஆட்டு சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது. சந்தை தொடங்கியதும் நூறுக்கணக்கான ஆடுகளை அழைத்து வந்த வியாபாரிகள் அவற்றை போட்டி போட்டு விற்பனை செய்தனர். வழக்கமாக ரூ.5,000-க்கு விற்கப்படும் ஆடுகள் ரூ.8,000 வரை விலை போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வரத்து குறைவின் காரணமாகவே விலை சற்று ஏற்றம் கண்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஒருசிலர் ஆடுகளை வாங்காமல் திரும்பி சென்றாலும் இன்று ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதேபோல் உளுந்தூர்பேட்டையிலும் புதன் கிழமை கூடும் வாராந்திர ஆடு சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனையாகி உள்ளன. சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து வியாபாரிகள் ஆடுகளை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர். விலை சற்று அதிகமாக இருந்தாலும் பண்டிகை காலம் என்பதால் வேறு வழியின்றி வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.