ஊட்டி: பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டிக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலத்தில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும்.
இதேபோல், பல ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்து காணப்படும். இது தவிர எப்போதும் கண்ணாடி மாளிகையைில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். தற்போது மலர் கண்காட்சிக்காக பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து செடிகளிலும் மொட்டுகள் காணப்படுகிறது. தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. மேலும், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் தொட்டிகளை கொண்ட மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில் கண்ணாடி மாளிகை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. கண்ணாடி மாளிகையில், பராமரிப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்தது. மேலும், பல ஆயிரம் புதிய மலர் தொட்டிகள் கொண்டு பல்வேறு மலர் அலங்காரமும் செய்யப்பட்டள்ளது. தற்போது கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டுள்ள நிலையில், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, மலர் கோபுரங்கள் அருகே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.