Friday, May 17, 2024
Home » நீலகிரியில் மழை பெய்யாத நிலையில் ரூ.4 ஆயிரத்துக்கு லாரி தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள்

நீலகிரியில் மழை பெய்யாத நிலையில் ரூ.4 ஆயிரத்துக்கு லாரி தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள்

by Mahaprabhu

ஊட்டி: நீலகிரியில் மழை பெய்யாத நிலையில், நாள்தோறும் ரூ.2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விலை கொடுத்து லாரிகளில் தண்ணீர் வாங்கி விவசாய நிலங்களுக்கு ஊற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில், கூடலூர், பந்தலூர், மஞ்சூர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும். இதனால், இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் அளவு உயரும். அனைத்து அணைகள், குளங்கள், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதேபோல், அக்ேடாபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மழை குறைந்த போதிலும், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதனால், அணைகள், குளங்கள், கிணறுகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் காணப்படும்.

இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் கூட விவசாயிகள் மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்வார்கள். இதேபோல், தேயிலை மகசூல் மிகவும் அதிகமாக காணப்படும். அதன்பின், மூன்று மாதங்களுக்கு மழை இருக்காது. ஆனால், மார்ச் மாதத்திற்கு பின், கோடை மழை சில தினங்கள் பெய்யும். இச்சமயங்களில் கனமழை கொட்டி தீர்க்கும். இதனால், நீலகிரி மாவட்டத்தில் எப்போதும் தண்ணீர் பிரச்சனை இருக்காது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். ஆண்டிற்கு 12 மாதங்களும் மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்வார்கள். இதேபோல், தேயிலை மகசூலும் அதிகமாக காணப்படும். ஆனால், கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. மேலும், கோடை காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெய்ய வேண்டிய கோடை மழையும் ஏமாற்றி வருகிறது. இதனால், நீலகிரியில் அனைத்து நீரோடைகள், குளங்கள், கிணறுகள் மற்றும் அணைகள் வறண்டு காணப்படுகிறது.

விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போனது. பெரும்பாலான விவசாயிகள் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து விட்டனர். ஒரு சிலர் தாழ்வான பகுதிகளில் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், சிலர் பல லட்சம் கொடுத்து வாங்கி காய்கறி விதைகள் வீணாகி விடும் என்பதால், விவசாயம் மேற்கொள்கின்றனர். அவர்கள், நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை லாரி தண்ணீர் வாங்கி விவசாய நிலங்களுக்கு ஊற்றும் அவநிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாத நிலையில், விவசாயிகள் லாரிகள் மூலம் நாள்தோறும் தண்ணீர் வாங்கி ஊற்றும் நிலையில், நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சில விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் மழை பெய்யும். இதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் மழை இருக்கும். இதனால், அனைத்து நீர் நிலைகளிலும் கோடை காலம் முடியும் வரை ஓரளவு தண்ணீர் இருக்கும்.

மேலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில தினங்கள் கோடை மழை பெய்யும். இதனால், ஆண்டு முழுவதும் விவசாயம் மேற்கொள்ள தேவையான தண்ணீர் கிடைக்கும். ஆனால், கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு இரு பருவமழையும் பெய்யவில்லை. மேலும், கோடை மழையும் எங்களை இரு மாதங்களாக ஏமாற்றி வருகிறது. எனவே, தற்போது நாள்தோறும் பல ஆயிரம் கொடுத்து தண்ணீர் வாங்கி ஊற்றி விவசாயம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யவில்லை எனில், மலைக்காய்கறி விவசாயம் பாதிப்பது மட்டுமின்றி, எதிர்பார்த்த மகசூல் மற்றும் விலை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதனால், நீலகிரி விவசாயிகளுக்கு இம்முறை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றனர். இது போன்று எப்போதாவதுதான் நீலகிரியில் மழை பெய்யாமல் வறட்சி ஏற்படுவது வழக்கம். பல ஆண்டுகளுக்கு பின், இம்முறை மழை ஏமாற்றி வரும் நிலையில், விவசாயம் மட்டுமின்றி, குடிநீர் ஆதாரங்களிலும் போதுமான தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

You may also like

Leave a Comment

20 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi