புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி ரோஸ் அவனீவ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘ பண மோசடி தடுப்புச் சட்டம் 45 பிரிவின் கீழ் பெண்களுக்கான பிரிவில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். குறிப்பாக கவிதாவின் மகன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வருவதால் அவரை கண்காணிக்கும் நிலையில் கவிதா இருக்கிறார்.
எனவே அதனை அடிப்படையாகக் கொண்டும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 4ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவனீவ் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவிஜா வழங்கிய தீர்ப்பில், ‘‘டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கு விவகாரத்தில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க முடியாது. ஏனெனில் அவரது தரப்பில் தற்போது தான் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எனவே இதுபோன்ற சூழலில் ஜாமீன் வழங்குவது என்பது சாத்தியம் கிடையாது என தெரிவித்த நீதிபதி, கவிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.