புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் சிவில் நீதிபதி பதவிக்கு ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சிவில் நீதிபதிக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது. சுமார் 250க்கும் மேற்பட்ட நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர். சிவில் நீதிபதிக்கு விண்ணப்பித்து தேர்வு ஆகாதவர்களின் தரப்பில் இருந்து டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குமுதா என்பவர் உட்பட மொத்தம் 37பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் சதீஸ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,” சிவில் நீதிபதி பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பில் தகுதியானவராக எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள்,” சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. எனவே இப்போது எப்படி உங்களையும் தகுதியானவர் என்று அறிவிக்க முடியும் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.