சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நன்செய் நிலங்களில் விவசாயம் செய்து வரும் உழவர்கள், சில ஆண்டுகளாக குத்தகை நெல்லை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதைக் காரணம் காட்டி, அந்த நிலங்களை பறிக்கும் செயலில் அறநிலையத்துறை ஈடுபட்டிருக்கிறது. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, குத்தகை நெல் செலுத்த முடியாத உழவர்களும், தங்களின் இயலாமையை காரணம் காட்டி, குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யுமாறு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கோயில் நில குத்தகை உழவர்களின் வாழ்வாதாரத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு குத்தகை நெல் பாக்கி தொடர்பான வழக்குகளில் இருந்து விடுவிக்கவும், குவிந்து கிடக்கும் குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கோயில் நில குத்தகை உழவர்களை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காக்க வேண்டும்.