சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா-சமூக நீதிக் காவலர் கலைஞர் குழு ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பொன்முடி கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இடையே பேச்சுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகள் அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசாகரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாகரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாகரூ.1000 வழங்கப்படும். மேலும் தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழக அளவில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாகரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாகரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாகரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
கலைஞரும் தமிழும், கலைஞரும் சமூக நீதியும், கலைஞரும் அரசியல் அதிகாரமும், கலைஞரும் பெண்ணியமும், கலைஞரும் அறிவியலும் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் மற்றும் கலைஞர் வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. விழுப்புரத்தில் நடத்தப்படும் கண்காட்சியில் குறும்படம், பேச்சுப் போட்டிகள் நடக்கும். இதற்காகரூ.25 லட்சம் அரசுத்துறை நிதி ஒதுக்கியுள்ளது. தனியார் கல்லூரிகளும் தங்களின் பங்களிப்பை நல்குவர். மாநிலக் கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் அதை தயாரிக்கும் பணி நிறைவுற்றுள்ளது. விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.