‘‘அடுத்தடுத்து லஞ்சம் வாங்கி கம்பி எண்ணுறாங்களாமே இலை கட்சி தலைவிகள்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல பட்டுல முடியுற ஊர் ஆட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருத்தரு வீடு கட்டியிருக்குறாரு. வீட்டுக்கு வரி கட்டுறதுக்காக அந்த ஊர் ஆட்சியோட மன்ற தலைவி கிட்ட கேட்டிருக்காரு. அதுக்கு அந்த தலைவி, எனக்கு கொடுக்க வேண்டியத இதுவரைக்கும் கொடுக்கவே இல்லை. இதுல வரி ரசீது வேண்டுமான்னு ஏகத்துக்கும் பேசி, 30 கே ெகாடுத்தா, ரசீது கொடுக்குறேன். இல்லன்னா தரமுடியாதுன்னு கறார் காட்டியிருக்குறாங்க. இதனால வேதனையடைஞ்ச தொழிலாளி. விஜிலென்ஸ்சுக்கு போயிட்டாராம். அதுக்கப்புறமா, தலைவி கிட்ட லஞ்ச பணம் 30 கே கொடுக்கும்போது, தலைவியையும், அவங்க வீட்டுக்காரரையும் விஜிலென்ஸ் கையும், களவுமாக பிடிச்சுட்டாங்க.
லஞ்சத்துக்கு ஆசைபட்ட தம்பதி இருவரும் சேர்ந்து, இப்ப கம்பி எண்ணிக்கிட்டிருக்காங்க. ஏற்கனவே போ என்று தொடங்குற 3 எழுத்து ஒன்றியத்துல இலைகட்சி ஊர் ஆட்சி தலைவி சிக்குனாங்க. இப்போது, 2வதாக இன்னொரு இலை கட்சி தலைவி சிக்கியிருக்குறது பரபரப்பை ஏற்படுத்தியிருக்குது. அதேசமயம் எல்லாத்துக்கும் லஞ்சம் கேட்குற மற்ற தலைவர், தலைவிகளும் அச்சத்துல இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மைக்கில் பேசுவதிலும் சண்டையாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு நகரின் பட்டி என முடியும் ஊரில் நடந்த இலைக்கட்சி உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில், உளறல் புகழ் மாஜி மந்திரி, ஊர்ப்பெயரை பெயரின் முன்னால் கொண்ட மாஜி மந்திரி, முன்னாள் மேயர், முன்னாள் எம்எல்ஏக்கள் என பலரும் பங்கேற்றனர். முதலில் ஊர்ப்பெயர் மாஜி மைக் பிடித்து பேச தொடங்கினார். அப்போது மைக் செயல்படவில்லை.
இதனால் சாதாரணமாக பேசிவிட்டு அமர்ந்தார். தொடர்ந்து உளறல் மாஜி மந்திரி, மைக்கை வாங்கி பேசத் தொடங்கினார். அப்பொழுது மைக் நன்றாக வேலை செய்தது. இதனால் ஊர்ப்பெயர் கொண்ட மாஜி தரப்பு தொண்டர்கள் கடும் எரிச்சல் அடைந்தனர். சுதாரித்த உளறல் மாஜி, தனது உரையை முடித்துக் கொண்டு மீண்டும் பேசுமாறு ஊர்ப்பெயர் மாஜியிடம் கேட்டுக்கொண்டார். அதை அவர் ஏற்காமல் தவிர்த்து விட்டார். மைக் விவகாரத்தில் வேண்டுமென்றே உளறல் மாஜி மந்திரி தரப்பினர் திட்டமிட்டு சதி செய்ததாக தொண்டர்கள் கூட்டத்தின்போது பேசிக் கொண்டனர். ஏற்கனவே இருதரப்புக்கும் மோதலாகிப் போய் தணிந்திருந்த நிலையில், மீண்டும் இருதரப்பினர் இடையே புகைச்சல் அதிகரித்திருப்பதை இந்நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது….’’ என்றார் விக்கியானந்தா.
‘‘செய்யாத வேலையை கண்டுபிடித்து விடுவார்களோ என நினைத்து தில்லாலங்கடி வேலை செய்தாராமே ஒரு அதிகாரி… என்ன விஷயம்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெல்லை மாவட்டத்தில் செல்வமான கண்காணிப்பு அலுவலர் ஆய்வுப் பணிக்கு வந்துள்ளார். பள்ளி கட்டிடம் கட்டுமானப் பணிகள், அங்கன்வாடி கட்டிடம் கட்டுமானப் பணி, அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர் அப்படியே அருகில் உள்ள ரெட்டியார் பெயரைக் கொண்ட ஊரின் குளத்தை ஆய்வு செய்ய வண்டியை விடச் சொன்னாராம். அப்போது அருகில் இருந்த கலெக்டரிடம், துணையான யூனியன் அதிகாரி ஒருவர் இந்த வழியாக குளத்திற்கு போக முடியாது என்று காதை கடித்துள்ளார்.
அதை கண்டு கொள்ளாத கலெக்டர் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்து விட்டு அந்த வழியாக வாகனத்தை செலுத்தினாராம். அந்த குளத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்காணிப்பு அலுவலர் ஏற்கெனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் ஆய்வு செய்த அதே நிலையில் இருந்ததாம். இதனால் டென்சன் ஆன கண்காணிப்பு அலுவலரும், கலெக்டரும் அந்த அதிகாரியை வறுத்து எடுத்து விட்டார்களாம். ஆடிப் போன அந்த அதிகாரியை குளம் மராமத்து பணியை உடனே முடித்து அறிக்கை தரச் சொல்லியிருக்கின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எடப்பாடி ஏதோ அதிரடியை மேற்கொள்ள இருப்பதாக சொல்கிறார்களே.. என்னவாம் அது..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அதிமுகவை முழுமையாக கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் என்று ஒரு பட்டியலை தயாரித்துள்ளாராம். அதில் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என்று ஒரு பெரும் பட்டியலே உள்ளதாம். அந்தப் பட்டியலை வைத்து அவர் விரைவில் அதிரடி மாற்றங்களை கட்சியில் சொல்ல உள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.