உத்திரமேரூர்: உத்திரமேரூரில் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 28ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. துவங்கிய நாள் முதல் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து 3ம் நாளானன்று சுந்தரவரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கருடசேவை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
இதனையடுத்து பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று, ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட சுந்தரவரதராஜர் திருதேரில் அமர தோரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தேரடி வீதியில் துவங்கிய தேரோட்டம் சின்ன நாராசம் பேட்டைத் தெரு, திருமலையா பிள்ளைத் தெரு, பஜார் வீதி, ராயர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, திரளான பக்தர்கள், தேரினை வடம் பிடித்து இழுத்து, ‘கோவிந்தா… கோவிந்தா…’ என்று முழக்கத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியையொட்டி கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு தரப்பினர் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் உத்திரமேரூர் போலீசார் ஈடுபட்டனர். விழாவில், உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.