Friday, May 10, 2024
Home » லட்சுமி கடாட்சம் இல்லத்தில் பெருக…

லட்சுமி கடாட்சம் இல்லத்தில் பெருக…

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு `ஹரிபலம்’ என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

* நாள்தோறும் துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மூன்றுமுறை வலம் வர வேண்டும்.

* இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

* பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது, அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்! பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

* சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப் பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோயில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.

* நாள்தோறும் விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

* மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

* ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

* எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ, அங்கு திருமகள் குடியேறுவாள்.

* வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால், பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி, பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

* சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

* தயிர், அருகம்புல், பசு முதலியவை களைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

* குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு, எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

* அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

* பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

* அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

* வெள்ளிக் கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

* வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.

* பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.

* விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.

*கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.

* ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால், வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

* உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.

* வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

* வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக் கூடாது.

* அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ, அணைக்கவோ கூடாது.

*நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

* பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.

* சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.

* ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக் கூடாது.

* தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலட்சுமியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக் கூடாது.

* தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லட்சுமியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.

* அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும், இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும், முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள். அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால், அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும். அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

* ஒவ்வொரு பௌர்ணமி அன்று, மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால், பாயசம், கல்கண்டு, கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உன்ன வேண்டும்.

*நெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லட்சுமி கடாட்சம் உண்டு.

* அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை, ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு (அன்னதானம் செய்ய) என்று போட்டால்தான் லட்சுமி கடாட்சம் உண்டாகும். லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்.

* நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் இல்லம் தேடி வருவாள்.

தொகுப்பு: அனுஷா

You may also like

Leave a Comment

fifteen + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi