சென்னை: சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
அத்துடன் 6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழை பெய்யும் என்றும் பின்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.