கோத்தகிரி : கோத்தகிரியில் பாதுகாப்பு கருதி தனியார் பள்ளி வாகனங்களை ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு வருகிற 7 ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளை திறக்க அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் பேருந்துகளை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் கோட்டாட்சியர் பூசன குமார், குன்னூர் டிஎஸ்பி குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயா (அமலாக்கம்), கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி, தீயணைப்புத்துறை ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலையில் வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு பணியின் போது கோத்தகிரி வட்டார பள்ளி வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்புகள் குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாகன ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது குறித்த விழிப்புணர்வு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோத்தகிரி சுற்றுவட்டார பள்ளிகளில் இருந்து மொத்தம் சுமார் 42 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொண்டார். இதில் தகுதி சான்று இல்லாத வாகனங்களை மீண்டும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் பள்ளி வாகன தகுதி ஆய்வின் போது வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.