பெரம்பூர்: சென்னை மாநகராட்சி சார்பில் தொழில்வரி வசூலிக்கவும், தொழில் உரிமத்தை புதுப்பிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன. அந்த வகையில் திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்தூர் 64வது வார்டு முதல் 70வது வார்டு வரை உள்ள அனைத்து வியாபாரிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது. திருவிக நகர் மண்டல வருவாய் அலுவலர் லட்சுமண குமார் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாமில் உதவி வருவாய் அலுவலர் ராணி, உரிமம் ஆய்வாளர் திருமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தொழில் வரி செலுத்துதல், கடைகளுக்கான உரிமம் புதுப்பித்தல உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வியாபாரிகள் காலை முதலே ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் தொழில் உரிமத்தை புதுப்பித்துக்கொண்டு தொழில் வரியை கட்டிச் சென்றனர். சுமார் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இதில் பயன்பெற்றனர்.