நாகை: கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுந்தமாவடி கடற்கரையில் இருந்து சுப்ரமணியன், செல்வத்துக்கு சொந்தமான 2 பைபர் படகில் 9 மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றனர். கோடியக்கரை கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் 4 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அதில் இரண்டு படகுகளில் இருந்த 9 மீனவர்கள் காயமடைந்தனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் கடலில் தள்ளி சித்திரவதை செய்ததாக நாகை மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, கைகளை கட்டி இலங்கை கடற்கொள்ளையர்கள் சித்தரவதை செய்ததாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட 9 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிலோ மீன்களையும், மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை கடற்கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.