Thursday, June 12, 2025
Home மருத்துவம்ஆரோக்கியவாழ்விற்குகீரைகள் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான் கீரை!

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான் கீரை!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

உடல் உழைப்பும் உணவுக் கட்டுப்பாடும் இல்லாத நம்மில் பெரும்பாலானோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி சிரமப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக, சர்க்கரை நோய், உடல் பருமன் அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்றவை. இதனை தவிர்க்க போதிய உடல் உழைப்பும், சரியான உணவு முறைகளை பின்பற்றுதலும் மிக அவசியம். அந்தவகையில், கீரைகள் நமது உடலை பாதுகாப்பதில் தனிப்பாங்குடன் செயல்படுகிறது. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் ஒருசில கீரைகள்தான் எல்லாராலும் அறியப்பட்டவை. பல மருத்துவ தன்மையுடைய கீரைகள் இன்றும் பலரால் அறியப்படாமலே உள்ளது.

அப்படிப்பட்ட கீரை வகைகளில் ஒன்றுதான் சிறுகுறிஞ்சான் கீரை. இது அதிக கசப்பு தன்மையுடையது. குறிஞ்சான்கீரையில் இருவகை உண்டு. ஒன்று சிறுகுறிஞ்சான் மற்றொன்று பெறுங்குறிஞ்சான். இவை கொடி போன்று காணப்படும். அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும் மலைப்பிரதேசங்களிலும் மற்றும் வேலிகள் ஓரத்திலும் இக்கீரை காணப்படும். இதன் இலை சிறியதாகவும், எதிர் அடுக்கில் அமைந்தும் காணப்படும். இக்கீரையில் மஞ்சள் நிறப்பூக்கள் கொத்து போன்று காணப்படும். சிறுகுறிஞ்சான் கீரைக்கு குறிஞ்சான் கீரை, குறுந்தை கீரை என்ற பெயரும் உண்டு.

இக்கீரையினை சர்க்கரைக் கொல்லி, நஞ்சு முறிப்பான் என்ற புனைப்பெயர்களிலும் அழைப்பது உண்டு. ஏனெனில் இதன் இலைகளில் காணப்படும் தாவர மூலக்கூறுகள் சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.சிறுகுறிஞ்சானின் தாவரவியல் பெயர் ஜிம்னிமா சில்வஸ்டரி ஆகும். இது அஸ்கிலப்டா பிடேஷியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இத்தாவரம் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தோனேஷியா, மலேசியா, சீனா, இலங்கை, ஆப்பிரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது.

உலக நாடுகள் அனைத்தும் சர்க்கரை நோயினை குணப்படுத்தும் முனைப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், பல ஆராய்ச்சியாளர்கள் சிறுகுறிஞ்சானிலிருந்து தாவர மூலக்கூறுகளை பிரித்தெடுத்து சர்க்கரை நோயினை குணப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதன் இலை, வேர், விதை என அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மையுடையதாக திகழ்கிறது.

சிறுகுறிஞ்சானில் காணப்படும் வேதிப்பொருட்கள்:

ஆல்கலாய்டுகள், டெரிபினாய்டுகள், சாப்போனின், ஜிம்னிக் அமிலம், அமைரின், ஜிம்னிமாசின், ஜிம்னிமனோல், ஜிம்னிமா சாப்போனின், அனகல்கோன், காம்ஃபெறால், ஜிம்னிஸ்ட்ரோஜெனின் உள்ளிட்ட பல்வேறு தாவர மூலக்கூறுகள் சிறுகுறிஞ்சானில் காணப்படுகின்றன.

சிறுகுறிஞ்சானின் மருத்துவ பயன்கள்:

சிறுகுறிஞ்சான் கீரை கீழ்கண்ட மருத்துவ பண்புகளை கொண்டதாக திகழ்கிறது. அவை:

சர்க்கரை நோயைக் கட்டுபடுத்த
வயிற்றுப்புண், வயிற்றுப் பூச்சிக்கு மருந்தாக
உடல் எடையை குறைக்க
உடல் வெப்பத்தினை சமநிலைப்படுத்த
பசியின்மை பிரச்னைக்கு தீர்வாக
இருமல், காய்ச்சல் மருந்தாக
சரும நோய் பிரச்னையை தவிர்க்க
பிசிஓடி பிரச்னைக்கு சிறந்த தீர்வாக
உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பினை குறைக்க
எல்லாவித விஷக்கடிகளுக்கும் மருந்தாக

என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மேலும், நமது உடலின் இயக்கம் சீராக இருக்க நரம்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். நரம்பு மண்டலம் வலுவிழந்தால் நரம்புத்தளர்ச்சி, வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. சிறுகுறிஞ்சான் இலைகளை பொடி செய்து, பசும்பாலில் கலந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் வலிமை பெற்று நரம்புத் தளர்ச்சி போன்ற குறைபாடுகளை நீக்குகிறது.

சுவாசம் சம்பந்தமான நோய்கள் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந்து வாயில் போட்டு, வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் 7 நாட்கள் வரை செய்ய நல்ல குணம் தெரியும்.
இத்தகைய நன்மைகளை கொண்ட சிறுகுறிஞ்சான் கீரையை சூப், ரசம், கழினி, அவியல் என செய்து வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை அளிக்கும்.

பாடல்

சிறுகுறிஞ்சானின் நற்குணம்
சிறுக்குறிஞ்சா வாதமொடு சீதத்தை நீக்கும்
மறுவுதிரமில்லாத மாதர்க் – குறுமுலகி
லத்தி சுரமு மகலாக் கடிவிடமுந்
தத்தி யகலத்தகர்க்குந்தான்.
வாதஞ்சுரஞ் சன்னிசுர மாறாக் கபசுரமும்
பூதலமும் விட்டோப் புரியுங்காண் – மாதேகே
ளக்கரநோய் தீர்க்கு மதிசுரந் தாகம்போ
தக்க சிறு குறிஞ்சாதான்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi