நீலகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத மரம் விழுந்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் கனமழை காரணாமாக ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் போக்குவரத்து சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதனால் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல கூடிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். உடனடியாக நெடுஞ்சாலை துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், நெடுஞ்சாலையில் 5 இடங்களில் சிறிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அதனையும் சீர் செய்து வருகின்றனர். மலை ரயில் பாதையிலும் பாறைகள் சரிந்துள்ளன. அத்தனையும் சீர் செய்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் மழை தீவிரமடையும் சூழல் இருப்பதால் அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.