Tuesday, June 11, 2024
Home » கொடநாடு பங்களாவில் ஆவணங்களை கொள்ளையடித்துவிட்டு பேரத்தின்படி ரூ.25 கோடியை கேட்டதால் அதிமுக ஆபீசில் என் தம்பியை அடித்தனர்: ஜெ.டிரைவர் கனகராஜின் அண்ணன் திடுக் தகவல்

கொடநாடு பங்களாவில் ஆவணங்களை கொள்ளையடித்துவிட்டு பேரத்தின்படி ரூ.25 கோடியை கேட்டதால் அதிமுக ஆபீசில் என் தம்பியை அடித்தனர்: ஜெ.டிரைவர் கனகராஜின் அண்ணன் திடுக் தகவல்

by Karthik Yash

சேலம்: கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்துவிட்டு பேரம் பேசியபடி ரூ.25 கோடியை கேட்டதால் தனது தம்பியை அதிமுக ஆபீசில் வைத்து அடித்ததாக டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் கூறினார். கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். இதுதொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபால், ஆவணங்களை அழித்ததாக கைது செய்யப்பட்டு இருந்தார். தனபால் சிறையில் இருந்தபோது நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆஞ்சியோ சிகிச்சை அளித்தனர். இதையடுத்து ஜாமீனில் வந்த தனபால் நேற்று சேலம் சிறைக்கு சென்று கூடுதல் கண்காணிப்பாளர் வினோத்துக்கு நன்றி கூறினார்.

பின்னர் தனபாலன் கூறுகையில், ‘கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் எனது தம்பி கூறிய பல்வேறு தகவல்களை கூற தயாராக இருக்கிறேன். கொடநாட்டில் இருந்து 5 பை நிறைய ஆவணங்களை எடுத்து வந்தான். அதில் 2 பையை சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பின்பகுதியில் உள்ள கட்சி ஆபீசில் வைத்து எனது தம்பி கொடுத்தான். அப்போது பேசியபடி கொடுக்க வேண்டிய ரூ.25 கோடியை கேட்டபோது தான் எனது தம்பியை அறைக்குள் வைத்து அடித்துள்ளனர். மாநகர அதிமுக முக்கிய நிர்வாகிகளும் அடித்துள்ளனர். கொங்கணாபுரம், தாரமங்கலத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும் தாக்கியுள்ளனர். இதுபோன்ற அனைத்து விவரங்களையும் தெரிவிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். இதனால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* தனபாலை விசாரிக்க ஊட்டி கோர்ட் அனுமதி
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, திட்டமிட்ட கொலை என்று சமீபத்தில் கனகராஜின் அண்ணன் தனபால் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி அப்துல் காதர் விசாரித்து, தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி விசாரித்து கொள்ளலாம் என தெரிவித்தார். இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கூறுகையில், ‘‘கனகராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரிக்க தனியாக உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. சம்மன் அளித்து விசாரித்து கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்’’ என்றார். இதனால் சிபிசிஐடி போலிசார் விரைவில் தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

18 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi