Wednesday, May 1, 2024
Home » கிளாம்பாக்கம் பஸ் முனையத்துக்கான போக்குவரத்து மேம்பாடு குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு

கிளாம்பாக்கம் பஸ் முனையத்துக்கான போக்குவரத்து மேம்பாடு குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு

by Karthik Yash

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தை இணைப்பது குறித்த ஆய்வு சிஎம்டிஏ தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் நடந்தது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமையில், அக்குழுமத்தின் 273வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னைக்கு வெளியே புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களுக்கு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துதல், தாம்பரம்-செங்கல்பட்டு புறநகர் ரயில் பாதையில், புதிய புறநகர் ரயில் நிறுத்தம் ஏற்படுத்துவது மற்றும் ரயில் நிறுத்தத்திலிருந்து பேருந்து முனையத்தை இணைப்பதற்கு நகரும் மேல்மட்ட நடைமேடை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாதவரம் பேருந்து மற்றும் சரக்குந்து வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நிதியளிப்பது சம்பந்தமாகவும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

three + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi