Monday, May 20, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

*பாலை உறை ஊற்றும்போது அதில் கொஞ்சம் அரிசிக் கஞ்சியை கலந்தால் தயிரானது பெயர்த்து எடுக்கும்படி கெட்டியாகி இருக்கும்.
*குழந்தைகளுக்கு கஞ்சி காய்ச்சும்போது, சிறிது சோயாபீன்ஸ் மாவைக் கலந்தால் புரதச்சத்து அதிக அளவில் கிடைக்கும்.
*வாழைக்காய் பொரியலில் நறுக்கிய பெரிய வெங்காயம், 2 பிடி வெந்த துவரம்பருப்பு, சிறிது தேங்காய்த் துருவலை கலந்து வதக்கி, இறக்கும் முன்பு சிறிது கடலை மாவு தூவி புரட்டினால் சுவை கூடுதலாக இருக்கும்.
*பட்டாணியை ஊறவைத்து, உப்பு சேர்த்து, பாதி வெந்தவுடன் எடுத்து வடிகட்டி லேசாக நிழலில் உலரவிட்டு எண்ணெயில் பொரித்தால் வெடிக்காது.
*மோர்க்குழம்பு வைக்கும்போது, ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்தால் ருசி அதிகமாகும்.
*போளி, கொழுக்கட்டைக்கு பூரணம் தயாரிக்கும்போது நீர்த்துவிட்டால், அவல் அல்லது சேமியாவை தூளாக்கி கலந்தால் பூரணம் கெட்டியாகும்.
*ரவா தோசைக்கு 2 தேக்கரண்டி கடலைமாவு சேர்த்துப் பாருங்கள். தோசை நன்கு சிவந்து கூடுதல் மொறு மொறுப்பாக இருக்கும்.
*எந்த ஊறுகாயும் தயாரித்தவுடன் சிறிது எண்ணெயை சூடாக்கி அதில் ஊற்றி வைத்தால் கெடாமல் இருக்கும்.
*பீட்ரூட் பொரியலில் தேங்காய் துருவலுக்கு பதிலாக பொட்டுக்கடலைத் தூளை தூவி கிளறினால் நல்ல மணமாக இருக்கும்.
*குக்கரில் வேகவைத்த பச்சைப்பட்டாணி அதிகப்படியாக வெந்துவிட்டால் பட்டாணி மேல் ஜில்லென்ற ஐஸ்வாட்டர் ஊற்றி 5 நிமிடம் கழித்து எடுத்தால் சரியான பக்குவத்தில் இருக்கும்.
*சுண்டைக்காய் மலிவாக கிடைக்கும்போது வாங்கி எண்ணெயில் வதக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் தூவி, எலுமிச்சைச்சாறு பிழிந்து கடுகு தாளித்துக் கொட்டினால் சுண்டைக்காய் ஊறுகாய் ரெடி.
*குங்குமப்பூ, கேசரி பவுடர் கலந்து ஜீரா தயாரித்து, அதில் ரசகுல்லாவை ஊற வைத்தால் நிறமும், மணமும் கூடுதலாகும்.
*பாதாம் வைக்கும் டப்பாவில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைப் போட்டு வைத்தால் பாதாம்பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
*எவர்சில்வர் டீ வடிகட்டியை சுத்தமாக்க நேராக நெருப்பில் சில நிமிடங்கள் காட்டி கழுவினால் போதும்.
*சோப் தண்ணீரோடு சில நாளிதழ் துண்டுகளை கலந்து உள்ளே போட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு குலுக்கி கொட்டிவிட்டு, புதிய தண்ணீர் ஊற்றி கழுவினால் ஃபிளாஸ்க் புதுசுபோல தோன்றும்.
*பிரெட் பழசானால் மாவு தூவிய அல்லது பரப்பிய செய்தித்தாளில் சுற்றி சூட்டடுப்பில் சூடாக்கினால் மெத்தென்று ஃபிரெஷ்ஷாகும்.
*எலுமிச்சம் பழத்தை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிதுநேரம் கழித்து எடுத்து பிழிந்தால் இரண்டு மடங்கு சாறு கிடைக்கும்.
*வெண்டைக்காய் மீது கடுகெண்ணெய் தடவி வைத்தால் நீண்ட நாட்கள் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
*உள்ளங்கை, கைவிரல்களில் எண்ணெய் தடவிய பிறகு பச்சைமிளகாயை நறுக்கினால் கை எரிச்சலைத் தவிர்க்கலாம்.
*தக்காளியை முள்கரண்டியால் லேசாக ஆங்காங்கே குத்திவிட்டு, எரியும் பர்னர் மீது காட்டினால், தக்காளி தோல் எளிதாக பிரிந்துவிழும்.
*ஷாம்பூ கலந்த தண்ணீரில் வாஷ்பேசினை கழுவினால் நீண்டநேரம் கிச்சன் வாசமாக இருக்கும்.
*பேக்கிங்சோடா அல்லது சோடா பைகார்பனேட் கரைத்த தண்ணீரில் தேய்த்து கழுவினால் பீங்கான் பாத்திரங்கள் பளபளப்பாக மின்னும்.
*கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் ஆரஞ்சுப் பழங்களைப் போட்டு எடுத்தால் தோலையும், சுளைகளையும் சுலபமாக பிரிக்கலாம்.
*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, சிறிது சோம்பை தூளாக்கி தூவினால் கமகமக்கும்.- அ.யாழினி பர்வதம்.
*கிச்சனில் ஒரு கப்பில் மணல் நிரப்பி, அதில் சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் நட்டு வைத்தால், துளிர்விட்டு வளர்ந்ததும், அதன் வாடைக்கு பல்லிகள் வராது.
*சோப் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பை துடைக்கும்போது ட்யூப்பையும் சேர்த்து துடைத்தால் ட்யூப் நெடுநாள் உழைக்கும்.
*சாப்பிட்ட பிறகு சிறிது வினிகரும், ஃபேர்பின் எண்ணெயும் கலந்து மேஜையைத் துடைத்தால் டைனிங் டேபிள் பளபளக்கும். நாற்றம் இருக்காது.
*மிக்ஸியில் அரைக்கும் பொருட்கள் குறைவாக இருந்தால் ஜாருக்கு பொருந்தும்படியான தட்டுவைத்து மூடிக்கொண்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.
*கிச்சனில் எலுமிச்சைச்சாறு சிந்தி வெள்ளைக் கறையானால் சிறிது வெண்ணெயை தடவி, சிலமணிநேரம் கழித்து துடைத்தால் தரை பளிச்சிடும்.
*பெருங்காயம் கட்டியானால் அந்த டப்பாவில் காம்புடன் பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால் பெருங்காயம் இளகி மிருதுவாகும்.
*முட்டைக்கோஸை துருவி நன்றாக வதக்கி மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் ரெடி.
*கறிவேப்பிலையை ஒரு அலுமினியப் பாத்திரத்தால் மூடி வைத்தால் விரைவில் காயாமல் இருக்கும்.
*மெதுவடைக்கு மாவு ஆட்டும்போது உளுந்தம் பருப்புடன் சிறிது துவரம் பருப்பை சேர்த்து ஆட்டினால் வடை மெதுவாக இருக்கும்.
*தேங்காய்த் தண்ணீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரம் காய்ந்து போகாமலிருக்கும்.
*வெங்காயம் வதக்கும்போது சிறிது பால் தெளித்தால் நல்ல நிறமாக, தீய்ந்து போகாமல் இருக்கும்.
*சப்பாத்தி செய்யும்போது மாவு ஒட்டாமலிருக்க, மாவை சில நிமிடங்கள் ஃபிரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
*காளான்களை பிளாஸ்டிக் பையில் வைப்பதை விட, பேப்பர் பையில் வைத்தால் புதுசு போலவே இருக்கும்.
*கண்ணாடி பாட்டில்களை சுத்தம் செய்ய ஒரு ஸ்பூன் வினிகருடன் சிறிது அரிசியைப் போட்டு ஊற வைத்து சிறிது நேரம் கழித்து, நன்றாக குலுக்கி கொட்டிவிட்டு நல்ல தண்ணீரில் கழுவினால் பளிச்சிடும்.
*பயன்படுத்திய எண்ணெயில் சிறிது துண்டு உருளைக்கிழங்கை நறுக்கிப் போட்டு வைத்தால் கசடு அடியில் தங்கும். சுத்தமான எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாம்.
*அப்பளம் உடையாமலும், நமத்துப் போகாமலும் இருக்க அரிசி வைக்கப்பட்ட டப்பாவில் போட்டு வைக்கலாம்.
*உப்பு கலந்த குளிர்ந்த நீரில் முக்கி எடுத்தால் தளர்ந்துபோன தக்காளிகள் கெட்டியாகும்.
*ஃபிரிட்ஜில் பழங்கள் கெடாமல் இருக்க, அவற்றை திறந்த ட்ரேக்களில் வைப்பதுதான் நல்லது. பாலித்தீன் பைகளோடு வைத்தால் நாள்பட வராது.- அண்ணா அன்பழகன்.

You may also like

Leave a Comment

16 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi