Saturday, July 27, 2024
Home » சென்னை ஸ்டைலில் பன்னாட்டு உணவுகள்!

சென்னை ஸ்டைலில் பன்னாட்டு உணவுகள்!

by Lavanya

சென்னை அசோக் நகரில் இயங்கி வருகிறது கேஃப் அசோனா என்கிற உணவகம். இந்த உணவகத்தில் கிடைக்கும் ஒவ்வொரு உணவும் தனித்த சுவையில் மிளிர்கின்றன. மெக்சிகன், பிரெஞ்ச் உள்ளிட்ட பல நாட்டு உணவு வகைகளைக் குறைந்த நேரத்தில் நேர்த்தியாக தயார் செய்து கொடுத்து அசத்துவதே இவர்களது ஒரு ட்ரேட் மார்க்காக இருக்கிறது. இந்த உணவகத்தை நடத்தி வரும் தீபிகாவைச் சந்தித்தோம். “எனக்கு சொந்த ஊரு சென்னைதான். சென்னையில் இருக்கிற ஐ.டி கம்பெனில வேலை பார்த்து வந்தேன். ஆன் சைட்க்காக வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். பேசிக்காவே நான் ஒரு ஃபுட்டி. அப்படி வெளிநாடு செல்லும்போதெல்லாம் எல்லா நாட்டு ஸ்டைல் உணவுகளையும் நான் டேஸ்ட் பார்ப்பேன். வெளிநாடுகளில் பெரும்பாலான உணவகங்களில் லைவ் கிச்சன்தான். அதனால் சமையல்காரர்கள் தயார் செய்யும் உணவினை அருகில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பேன். இவை அனைத்தையும் நான் வீட்டில் இருந்து தயார் செய்து பார்ப்பது என்னுடைய ஹாபி.

முதலில் இப்படித்தான் சமைக்கத் தொடங்கினேன். என்னோட ஃபுட்க்கு முதல் ரிவியூவர்ஸ் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். இப்ப உணவுத் துறையில் இருக்கிற எல்லாருக்குமே ருசியான உணவு தயார் செய்றத சொல்லித்தர முதல் குருநாதர்னா அது அவங்க அம்மாவாத்தான் இருப்பாங்க. எனக்கும் அப்படித்தான். என்னோட உணவுல என்னென்ன குறை இருக்குன்னு அம்மா சொல்லிடுவாங்க. உணவு சாப்பிடுவதற்கு நல்ல ருசியா இருந்தாலும் பாராட்டுவாங்க.கேஃப் அசோனா ஆரம்பிக்கிறதுக்கு முக்கிய காரணமே என்னுடைய கணவர் விஜய்தான். அவரும் என்னைப் போலவே பெரிய ஃபுட்டி. அவரோட சப்போர்ட் இருந்ததால்தான் இன்றைக்கு அசோனா சாத்தியமாச்சு. இந்த கஃபேவ தொடங்குவதற்கு 6 வருஷமா பிளான் பன்னோம். இதில் இரண்டு வருடம் கொரோனா லாக்டவுனில் போய்விட்டது. அப்படி பிளான் செய்து 2023 இல் தான் உணவகத்தைத் தொடங்கினோம். இண்டிரியர் எப்படி டிசைன் செய்யலாம்.

புதுசா எதாவது இன்னோவேட்டிவா யோசிக்கலாம்ன்னு சொல்லிட்டே இருப்பார். இன்றைக்கு வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் எங்களது உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு போறாங்க. உணவகத்தின் இண்டிரியர் முழுவதையும் அசோக் நகர்ல பேமஸான ஸ்பாட்களை நினைவூட்டும் வகையில் ஒவியமாக வடிவமைத்து இருக்கிறோம். இதில் அசோக் பில்லர், மெட்ரோ, கோயில், தண்ணி டேங்க், உதயம் தியேட்டர், கிரவுண்ட்ல சின்ன பசங்கல்லாம் விளையாடுற மாதிரி படங்களை வரைந்து இருப்போம். இதை பார்த்துக்கொண்டு சாப்பிடுபவர்கள் ரிலாக்ஸ்ஸா உணர்வார்கள். உணவகத்தைப் பொறுத்தவரையில் எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. மெக்ஸிகோ, பிரெஞ்சு ஸ்டைல் உணவுகளை இந்தியா ஸ்டைலில், அதுவும் நம்ம சென்னைக்கு ஏற்றபடி கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் அதில் அனுபவமும் இருக்க வேண்டும். இதனால் அனுபவம் வாய்ந்த, சென்னையில் இருக்கின்ற பிரபல உணவகங்களில் பணிபுரிந்து வந்த சமையல்காரர்களை பணிக்கு அமர்த்தினேன். இவர்கள் அனைவரும் பிரெஞ்ச், மெக்ஸிகோ நாட்டு உணவு வகைகளைத் தயாரிக்க கூடியவர்கள். இவர்கள் மூலமே அனைத்து உணவுகளையும் தயார் செய்து கொடுத்து வருகிறோம்.

அனைத்து வகை பீட்சாவிற்கும் தேவையான மசாலாவை நானே வீட்டில் தயார் செய்து எடுத்து வந்துவிடுவேன். உணவகம் துவங்கியபோது அனைத்து வகை உணவுகளையும் எனக்குத் தெரிந்த நண்பர்களிடத்தில் கொடுத்து ரிவ்யூ கேட்பேன். ருசித்த அனைவரும் உணவில் இருக்கும் நிறை குறைகளை என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கூறிய குறைகளை சரி செய்வேன். பின்பு தயார் செய்த உணவினை அவர்களிடமே கொடுத்து ருசி பார்க்க சொல்வேன். செய்த டிஸ் அனைத்திற்கும் நல்ல ரிவ்யூ கிடைத்தால் மட்டுமே அதை நமது உணவகத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அப்படி நல்ல ரிவ்யூ கிடைத்த உணவுகளை மட்டுமே எங்களது உணவகத்தில் வைத்திருக்கிறோம். ஒரு டிஸ்ஸை சாப்பிட்டு செல்லலாம் என்று வருபவர்கள் உணவின் ருசிக்காக மற்றொரு டிஸ்ஸையும் ட்ரை பண்ணிடுவாங்க. அந்த அளவிற்கு தரமான ருசியில் மெக்ஸிகன் ஹெர்ப்டு ரைஸ், பெப்பி பனீர் ப்ரைடு ரைஸ், மசாலா மஸ்ரூம் ரேப், கிரன்ச்சி வெஜ்ஜி ரேப் போன்ற பல நாட்டு உணவுகளையும் தயார் செய்து சென்னை ஸ்டைலில் கொடுக்கிறோம்.இந்தியாவிலேயே உணவில் பல மாற்றங்கள் இருக்கும். ஆந்திராவில் காரம் அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் நாம் அளவாக மட்டுமே காரத்தை சேர்த்துக்கொள்வோம்.

வட மாநிலங்களில் சாப்பாத்தியை ஆலுவோடு வைத்து சாப்பிடுவார்கள். கேரளாவில் பரோட்டா பீப் கறி ரொம்ப பேமஸ். அதேபோலதான் ஒவ்வொரு பகுதியிலும் உணவில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும். இந்த டிஸ் எல்லாத்தையும் நம்ம ஸ்டைலில் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் தொடங்கி எங்களது உணவகம் இன்றைக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவோடு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நாம் எங்கு இருக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் உணவினைத் தயார் செய்து கொடுத்தால் போதும். வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வந்து சாப்பிடுவார்கள். பத்து டிஸ்ல தொடங்கிய எங்களது உணவகத்தில் இன்றைக்கு 80க்கும் மேற்பட்ட டிஸ்கள் இருக்கு. மொஜிடோ, ப்ரேப், மில்க்சேக், அசோனா காம்போ, சாட், பளாட் பிரட், ரைஸ் பவுல் காம்போ, சேன்வெஜ்னு தனித்தனி செக்சனா உணவுகளைப் பிரித்து வைத்திருக்கிறோம். இதில் வாடிக்கையாளர்கள் விரும்பும் பிற நாட்டு உணவுகளை நம்ம ஊர் ஸ்டைலில் கொடுக்கிறோம்.

அதிலும் எல்லாமே சைவம் மட்டும் தருகிறோம்.அருகில் கோயில் இருப்பதால் நிறைய பேர் தரிசனம் செய்துவிட்டு உணவகத்திற்கு வருவார்கள். முதலில் வெளிநாட்டு ஸ்டைல் உணவு மட்டும் கொடுக்க பிளான் செய்து வைத்திருந்த நான், இவர்களுக்காவே மெனுவில் இட்லி, பானிப்பூரி, ஜீரா ரைஸோடு சேர்த்து சன்னா மசாலாவோ அல்லது பனீர் பட்டர் மசாலாவோ கொடுத்துட்டு வரோம். இதுபோக சப்பாத்தி, பனீர் ரொட்டி, மிக்ஸ் வெஜ் ரொட்டின்னு தருகிறோம். உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களில் நிறைய பேர் ஆர்டர் செய்து சாப்பிடுவது மெக்ஸிகன் ஹெர்ப்டு ரைஸ், மசாலா மஸ்ரூம் ரேப், க்ரீமி சரி சாஸ் பாஸ்தா, பனீர் டிக்கா, எக்ஸ்டீர்ம் வெஜ், க்ரீமி வெஜ்ஜி எலகன்ச், க்ரீமி மஸ்ரூம் டிலைட், நெய்ப்பொடி இட்லி, பெர்ரேரோ ரோச்சர் மில்க்சேக், நட்டெல்லா மில்க்சேக், தாஹி சமோசா சாட்ன்னு நிறைய டிஸ் இருக்கு.

பிரபலங்கள் பல பேர் இங்கு வந்து சாப்பிடுறாங்க. அப்படி வருபவர்கள் சில புதிய டிஸ்களை சமைத்துத் தரச் சொல்லி சாப்பிடுவார்கள். அந்த டிஸ் நல்ல ருசியில் இருந்தால் அதனை மற்ற வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் தரும் அபிப்பிராயத்தை கருத்தில் கொண்டு அந்த டிஸ்ஸை மெனு கார்டில் சேர்ப்பேன். உணவகத்திற்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் நான் உறவினர்கள் போலத்தான் பார்க்கிறேன். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு உணவினை பார்த்துப் பார்த்து தயார் செய்கிறேன். இதுமட்டுமல்லாமல் எம்என்சி கம்பெனிகள், பிறந்த நாள் பார்ட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் உணவுகளை ஆர்டரின் அடிப்படையில் தயார் செய்து கொடுக்கிறோம். ஓடி ஓடி உழைக்கும் அனைவரும் அவர்களுக்காக செலவு செய்வது என்றால் அது வயிற்றுக்கு மட்டும்தான். அதை கருத்தில் கொண்டுதான் உணவகத்திற்கு சாப்பிட வருபர்கள் மன திருப்தியோடு சாப்பிட்டு செல்ல வேண்டும் என்று இந்த கேஃப் அசோனா உணவகத்தை நடத்தி வருகிறேன்’’ என அக்கறை கலந்த வார்த்தைகளோடு பேசுகிறார் தீபிகா.

சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: வின்சென்ட் பால்.

 

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi