Sunday, September 1, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

*வடகம் இருக்கும் பாத்திரத்தில் சிறிது மிளகாய் வற்றலையும் போட்டு வைத்தால் பூச்சி, வண்டு வராது.
* சாதம் மீதம் ஆகிவிட்டால், அதில் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, சீரகம் சேர்த்து பிழிந்தால் சாதவற்றல் ரெடி.
* இரவில் சாதம் மீதமாகிவிட்டால், அதில் புளிக் கரைசல், உப்பு, சிறிது மஞ்சள் தூள் கலந்து, கிளறி வைத்து மறுநாள் தாளித்தால் அறுமையான புளி சாதம் தயார்.
* வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்புத்தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கறையும் வராது.
* பஜ்ஜி செய்யும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளை மிளகாய்ப்பொடி, உப்புடன் கலந்து அரைமணி நேரம் வைத்திருந்து, பின் பஜ்ஜி மாவில் போட்டு செய்தால் பஜ்ஜி சுவையாய் இருக்கும்.
* உப்புமா வகைகள், கலந்த சாத வகை களைப் பரிமாறும்போது ஓமப்பொடி, காராபூந்தி, மிக்ஸர் போன்ற ஏதாவதொன்றைத் தூவிப் பரிமாறினால், கரகரப்பு கூடும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்- எம். நிர்மலா.
* சில கத்தரிக்காய்கள் கசப்பாக இருக்கும். அவ்வாறு உள்ள காயை சுண்ணாம்பு கலந்த நீரில், சிறிதுநேரம் நறுக்கி போட்டுவைத்து, பிறகு எடுத்துக் கழுவிவிட்டு சமைத்தால் கசப்பு காணாமல் போகும்.
* பச்சை மிளகாயை நறுக்கும்போது ஏற்படும் கை எரிச்சலைத் தவிர்க்க கத்தரிக்கோலால் நறுக்கலாம்.
* மிக்ஸி பாத்திரத்தில் இருக்கும் மசாலா வாசனையை அகற்ற விரும்பினால் கொஞ்சம் பிரெட்டைப் போட்டு அரைத்தால், அதில் உள்ள மசாலா வாசனை போய்விடும்.
* சூப் செய்யும்போது ஒரு துண்டு வெங்காயம் சிறிது கடுகை வறுத்துச் சேர்த்துக் கொள்ளுங்கள். சூப் மிகவும் வாசனையுடன் இருக்கும்.
* 24 மணி நேரம் கடந்துவிட்டால், கொதிக்க வைத்த குடிநீரில் மறுபடியும் கிருமிகள் சேர்ந்து விடுகின்றன. எனவே அவ்வப்போது வேண்டிய அளவு நீரை மட்டும் காய்ச்சிக் குடிக்கலாம்.
* டிக்காஷன் இறக்கிய டீத்தூளை வெயிலில் காய வைத்துக் கொஞ்சம் சாம்பல், சீயக்காய்த் தூள், தவிடு போன்றவற்றை கலந்து வைத்துக் கொண்டால் பித்தளை, வெண்கலம், ஈயப் பாத்திரங்களைத் தேய்க்கலாம். பளிச்சென்று இருக்கும். கொஞ்சம் புளியே போதுமானதாய் இருக்கும்.
* ஒரு பிடி வேப்பிலை, ஒரு கையளவு உப்பு சேர்த்து துணியில் கட்டி கோதுமை மாவில் போட்டு வைத்தால் வண்டு வராது.
* பால், மருந்து மற்ற உணவுப் பொருட்கள் வாங்கும்போது அதன் எக்ஸ்பயரி தேதியைப் பார்த்து வாங்கவும்.– இந்திராணி தங்கவேல்.
* தக்காளி சாஸ் பாட்டிலை எவ்வளவு குலுக்கினாலும் சீராக விரைவாக வெளிவராது. இதற்கு சாஸ் பாட்டிலுக்குள் அடி வரை ஒரு ஜூஸ் ஸ்ட்ராவை செருகி வைத்தால் சுலபமாக எடுக்க வரும்.
* கறிவேப்பிலை, கொத்துமல்லியை பிளாஸ்டிக் கவருக்குப் பதில் எவர்சில்வர் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் கெடாது.
* கட்லெட் செய்ய பிரெட் தூள் கிடைக்கவில்லை என்றால் ரவையை சிறிதளவு எடுத்து மிக்ஸியில் தூள் செய்து பயன்படுத்தலாம். மொறுமொறுப்பாக இருக்கும்.
* வாழைக்காய்களை ஃபிரிட்ஜில் வைக்கும்போது, அப்படியே வைக்காமல் இரண்டாக நறுக்கி வைத்தால் வாழைக்காய் கருக்காமல் அப்படியே புதிதாக இருக்கும்.
* பூரிக்கு கிழங்கு குருமா செய்யும்போது வெங்காயம் நிறைய போடாமல் பாதி வெங்காயம், பாதி கோஸ் நறுக்கி சேர்த்தால் குருமா சுவை தூக்கும்.
* தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை தூள்செய்து கலந்து வாரமொரு முறை டைனிங் டேபிளை துடைத்தால் துர்நாற்றம் சேராது. ஈக்களும் பூச்சிகளும் நெருங்காது.
* ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது 2 ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து சேர்த்தால் பாயசம் கெட்டியாகவும் மணமாகவும் இருக்கும்.
* வெண்டைக்காய்களை ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் முற்றலாகும். துணிக்குள் சுற்றி வைத்தால் நான்கைந்து நாட்கள் வரை இளசாக இருக்கும்.
* நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை உடனே சமைக்கவில்லையென்றால் அதன் மீது சில துளிகள் எலுமிச்சைச் சாறு பிழிந்து வைத்தால் மறுநாள் வரை கூட அப்படியே இருக்கும்.
* உடைத்த தேங்காயை முழுவதும் பயன்படுத்த முடியாவிட்டால், துண்டு போட்டு வெயிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால், எத்தனை நாட்களானாலும் கெட்டுப் போகாது.– அ.யாழினி பர்வதம்.
* பாட்டிலில் இருந்து ஊறுகாய் எடுக்கும்போது எவர்சில்வர், பிளாஸ்டிக் ஸ்பூன் உபயோகிக்காமல் மரத்தாலான ஸ்பூனை உபயோகிக்கலாம். இதனால் ஊறுகாய் கெடாது. ஸ்பூனும் பாதிக்காது.
* தக்காளி சூப் தயாரிக்கும்போது ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்து சூப்பில் போட்டால் ருசி கூடுதலாகக் கிடைக்கும்.
* பால், பருப்பு, சாதம் இவற்றை வைக்கும் பாத்திரங்களை அடுப்பில் வைக்கும்போது பாத்திரங்களின் மேல் விளிம்பிலிருந்து உள்புறம் அரை அங்குல அளவிற்கு ஏதாவது எண்ணெய்யைச் சுற்றி தடவினால் பொங்கி வழியாது.
* முற்றின தேங்காயைப் பல்லுபல்லாக நறுக்கி நெய்யில் சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்த்தால் முந்திரிப்பருப்பை விட சுவையாக இருக்கும்.
* கிரைண்டர் சுற்றுவதால் உண்டாகும் உஷ்ணத்தைத் தவிர்க்கவும், வெயில் காலத்தில் மாவு அதிகம் புளிக்காமல் இருக்கவும் மாவு அரைக்கும்போது ஐஸ் வாட்டர் ஊற்றவும். அல்லது ஐஸ்கட்டிகளைப் போட்டு அரைக்கலாம். – கவிதா பாலாஜி.

You may also like

Leave a Comment

8 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi