திருவனந்தபுரம்: கேரளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா உள்பட தொற்று நோய்கள் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் இதுவரை 84 பேர் பலியாகிவிட்டனர். கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா உள்பட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. கடந்த சில வாரங்களாக தினசரி சராசரியாக 15,000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்ற வண்ணம் உள்ளனர். இது அரசு மருத்துவமனைகளுக்கு செல்பவர்களின் கணக்காகும். தனியார் மருத்துவமனைகளுக்கும் காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் சிகிச்சைக்கு செல்கின்றனர்.
மலப்புரம், எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் தான் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 68 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 16 பேரும் பலியாகியுள்ளனர். தற்போது கேரளாவில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.