Sunday, September 1, 2024
Home » கேரள சட்டசபையில் கவர்னர் உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்த ஆரிப் முகமதுகான்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

கேரள சட்டசபையில் கவர்னர் உரையின் கடைசி பத்தியை மட்டும் வாசித்த ஆரிப் முகமதுகான்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

by Mahaprabhu

திருவனந்தபுரம்: ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததால் கேரள சட்டசபையில் இன்று உரையில் இருந்த கடைசி பத்தியை மட்டும் வாசித்து ஒரு நிமிடத்தில் சபையிலிருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார். தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் பிறகு தான் கவர்னர் ஆரிப் முகம்மது கான் சில மசோதாக்களில் கையெழுத்து போட்டார். மேலும் சில மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அவர் அனுப்பி வைத்தார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கிடையே கேரள பல்கலைக்கழகங்களில் சங்பரிவார் அமைப்பினருக்கு பதவி கொடுப்பதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, கவர்னரைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறது.

இதனால் கேரள அரசு மற்றும் கவர்னருக்கு இடையேயான மோதல் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஒவ்வொரு கூட்டத் தொடர் தொடங்கும்போதும் சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரையை மாநில அரசுதான் தயாரித்து கவர்னருக்கு அனுப்பி வைக்கும். சட்டசபையில் வைத்து உரை முழுவதையும் கவர்னர் வாசிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் சட்டசபைக்கு வந்தார். அப்போது சபை வாயிலில் அவரை முதல்வர் பினராயி விஜயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன்பின் சட்டசபைக்குள் நுழைந்த அவர், சபாநாயகரின் இருப்பிடத்திற்கு சென்று உரையை வாசிக்கத் தொடங்கினார். ஆனால் 63 பக்கங்களைக் கொண்ட அந்த உரையின் கடைசி பாராவை மட்டுமே வாசித்த கவர்னர் ஆரிப் முகம்மது கான், ஒரு நிமிடத்திலேயே சபையிலிருந்து வெளியேறினார். செல்லும்போது சபையில் இருந்த உறுப்பினர்கள் யாருக்கும் வணக்கம் கூட செலுத்தாமல் அவர் வெளியேறினார். சபைக்கு வெளியே இருந்த பத்திரிகை நிருபர்களிடம் கூட அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஒன்றிய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருந்தது தான் உரை முழுவதையும் வாசிக்க கவர்னர் மறுத்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. கூட்டாட்சிக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. உரிய நிதியை மாநிலத்துக்கு வழங்காததால் மாநிலத்தில் ஒன்றிய அரசே நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உச்சநீதிமன்றத்தை மாநில அரசு அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டாட்சிக்கு ஏற்ப ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என கவர்னர் உரையில் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கண்டனம் கவர்னர் ஆரிப் முகம்மது கானின் இந்த நடவடிக்கைக்கு கேரள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கூறியது: உரை முழுவதையும் வாசிக்காமல் கடைசி பாராவை மட்டும் வாசித்து ஒரு நிமிடத்தில் சபையிலிருந்து வெளியேறிய கவர்னரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இது கேரள சட்டசபைக்கு ஏற்படுத்தப்பட்ட கடும் அவமானம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi