கரூர்: துருக்கியை சேர்ந்த தொழிலதிபருக்கும், கரூர் பெண்ணுக்கும் இந்து முறைப்படி நேற்று கரூரில் திருமணம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பிடெக் பட்டதாரி. இவர், டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். துருக்கி நாட்டை சேர்ந்தவர் எம்டெக் பட்டதாரி அகமது ஜெமில் கயான். தொழிலதிபர். இவர் துருக்கி மற்றும் டெல்லியில் தொழில் செய்து வருகிறார். இவர்களிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து தங்கள் காதல் குறித்து இருவரும் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் நேற்று காலை கரூர் பசுபதிபாளையத்தில் உள்ள பெண்ணின் வீட்டில் இந்து முறைப்படி, மாப்பிள்ளை அழைப்பு, கன்னிகாதானம் போன்ற சடங்குகள் நடத்தப்பட்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தமிழ் தெரியாத மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒவ்வொரு நிகழ்வும் ஆங்கிலத்தில் விளக்கப்பட்டு திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்வை துருக்கியில் இருந்து வந்திருந்த மணமகனின் உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, நிகழ்ச்சிகளை வீடியோவில் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை தாந்தோணிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.