காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி கிளைகளில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டின் அடமான நகைகள் குறித்து ஆய்வு நடைபெற்ற போது நகைகளின் எடை, தரம் ஆகியவற்றில் சந்தேகம் ஏற்பட்டத்தை அடுத்து கரப்பேட்டை, கம்பவார் பாளையம் மற்றும் சங்கரமடம் அருகே உள்ள மூன்று இந்தியன் வங்கி கிளைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 2023ம் ஆண்டு மே முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராணிப்பேட்டையை சேர்ந்த மேகநாதன், பிரகாஷ், சசுரேந்தர்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த சிலரையும் காவல்துறை தேடி வருகிறது. இவர்கள் அனைவரும் 3 வங்கி கிளைகளில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.53 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.