கமுதி: கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குதிரை, யானை, காமதேனு, ரிஷபம் ஆகிய பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. நேற்று நள்ளிரவு முதல் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்த துவங்கினர்.
பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடல் முழுவதும் களிமண் சேறுபூசிக் கொண்டு, கையில் வேப்பிலையுடன் கோயிலை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 11 நாட்கள் விரதமிருக்கும் பக்தர்கள், கமுதி ஊரணி கரையில் உள்ள களிமண் சேற்றை தலை முதல் கால் வரை பூசி முத்துமாரியம்மன் கோயில் சென்று வழிபட்டு செல்கின்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கினிச்சட்டி, பூப்பெட்டி பால்குடம், 101 சட்டி, 51 சட்டி, நாக்கில் வேல் குத்துதல் என தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். நூற்றுக்கணக்கானோர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.