கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று பறக்கவிட்டார். இந்த பலூன் தரையிலிருந்து 125 அடி உயரத்தில் பறக்கவிடப்பட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெகதீஷன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100 சதவீத வாக்குப்பதிவை செலுத்திட வலியுறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள், குறும்படங்கள், விழிப்புணர்வு பேரணிகள், ரங்கோலி கோலங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வாக, பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஆட்டோக்கள் மூலமாக ஊர்வலம் சென்றும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சூலூர் வட்டம், கருமத்தம்பட்டி உள்வட்டத்தின் மேற்கு எல்லை ரயில் நிலையம் முத்துக்கவுண்டன் புதூரிலிருந்து சோமனூர் ரயில் நிலையம் வரை ரயில் பயணியரிடம் 100% வாக்குப்பதிவு குறித்தும் வாக்களிப்பு சரிபார்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் சேர்வைக்காரன்பாளையம் கிராமத்தில் உள்ள தேவ் க்ரிஷ் பாரத் கேஸ் ஏஜென்சீஸ் நிறுவனத்தில் உள்ள குடோனில் உள்ள எல்பிஜி உருளை மற்றும் தண்ணீர் உருளைகளிலும் ஒட்டப்பட்டது. நம் இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதற்கிணங்க வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரால் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. காரமடை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கொண்டு 29 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தேர்தல் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.