சென்னை: கச்சத்தீவு பிரச்சனையில் உண்மையில் என்ன நடந்தது? பாஜக தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் இப்போது மீண்டும் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்காக கச்சத்தீவை பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் மீது குறை கூறும் மோடி அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனவும் வினவி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்தியில், கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று 2015 ஜனவரி 27 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியுள்ளது. கடிதம் வந்த அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி. வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர்.
2015 ஜனவரி 27ம் நாள் இந்திய அரசு தந்த கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பாஜக தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை பாஜக தலைவர்கள் வெளியிடுகிறார்கள். இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறது. பாஜகவின் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.