Thursday, May 16, 2024
Home » மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கை அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன்?: மனித உரிமை ஆணையத்துக்கு ஐகோர்ட் கேள்வி

மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கை அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன்?: மனித உரிமை ஆணையத்துக்கு ஐகோர்ட் கேள்வி

by Kalaivani Saravanan

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கை அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன்? என மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2022-ல் உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் மற்றும் சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு ஜெயக்குமாரும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இருவரும் அளித்த புகாரை கடந்த ஆண்டு ஜூலை மாதம், மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. ஆனால், தான் அளித்த புகாரில் தனது விளக்கத்தைக் கேட்காமல் வழக்கை முடித்து வைத்ததாக கூறி, ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், ஆணைய உறுப்பினராக உள்ள திமுக ஆதரவு நபரால் தனது புகார் நேர்மையாக நடுநிலையுடன் விசாரிக்கப்படவில்லை எனவும் புகாரை முடித்து வைத்த ஆணைய உத்தரவை ரத்து செய்து, புகார் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் காவல்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயக்குமார் புகாரை காவல்துறை அறிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏன் முடித்து வைக்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் காவல்துறை அறிக்கை மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும்; புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், உரிய காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

seventeen + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi