நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பார்த்த விவசாயிகள், இப்போது அதிகளவில் காய்கறி, மலர் சாகுபடியில் இறங்கியிருக்கிறார்கள். அதிலும் வாசனை மிகுந்த மல்லிகையைப் பயிரிட பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் பனி உள்ளிட்ட காரணிகளால் மல்லியில் மகசூல் குறைகிறது. அந்த சமயங்களில் மகசூலை அதிகரிக்க வழி சொல்கிறார் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் குமரவேல்.“சேலம் மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் பூச்செடிகள், பந்தல் காய்கறிகள், மா, வாழை, தென்னை, மிளகு, காபி, மரவள்ளி உள்ளிட்ட பயிர் வகைகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். சீசனைப் பொறுத்து காய்கறிகளை அறுவடை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். ஆனால் மல்லியைப் பொறுத்த வரையில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நல்ல விலை கிடைக்கும். அப்போது மல்லிகை உற்பத்தி பனிப்பொழிவால் குறையும். ஆனால் அந்த நேரங்களில் உற்பத்தியை அதிகரித்தால் நல்ல விலைக்கு விற்கலாம். ஆனால் அதற்கு நாம் சில தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஏற்கனவே நடவு செய்துள்ள மல்லிகைச் செடிகளை கவாத்து செய்வது முக்கியம்.
அதிலும் குறிப்பாக செப்டம்பர் மாத இறுதியில் மல்லிகைச் செடிகளை கவாத்து செய்து, அதோடு 10 கிலோ தொழுவுரம் அல்லது ஆட்டு எரு, அசடோபாக்டர், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, சூடோமோனாஸ் அல்லது யூரியா 130 கிராம், சூப்பர் பாஸ்பேட் (SSP) 750 கிராம், பொட்டாஷ் 200 கிராம், நுண்ணூட்டக் கலவை 50 கிராம் ஒரு செடிக்கு இட வேண்டும். கவாத்து செய்த இரண்டாம் நாள் முதல் பஞ்சகாவ்யம் 30 மில்லி, ஹியூமிக் அமிலம் 4 மில்லி, இளநீர் தண்ணீர் 50 மில்லி மற்றும் முருங்கை இலைச்சாறு 50 மில்லி கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பருவமில்லா காலங்களில் மல்லிகை நல்ல மகசூல் கொடுக்கும். இந்த சமயங் களில் சாறு உறுஞ்சும் பூச்சிகளான செம்பேன், இலைப்பேன், மொட்டு துளைப்பான் போன்ற பூச்சிகளையும், இலைப்புள்ளி மற்றும் வாடல் நோய்களையும் மருந்துகள் தெளித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.