மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு 21 வயது பெண்ணை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 6 மாதமாக இருவரும் ஜாலியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர், இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், அந்த வாலிபர் வேலை ஏதுமின்றி இருந்துள்ளார். இதற்கிடையே தனது காதலியை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தி தாக்கியுள்ளார்.
அவரது அந்தரங்க உறுப்புகளை பிளேடால் காயப்படுத்தி உள்ளார். இதையறிந்த பெண்ணின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து அந்தப் பெண்ணின் காதலன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் இருந்த அந்த வாலிபர், ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதன்பின் தனது காதலியை தேடிச் சென்று அவரையே திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் பாலியல் பலாத்காரம் ெதாடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மும்பை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏபி சர்மா, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அவர் அளித்த தீர்ப்பில், ‘கடந்த 2017ம் ஆண்டு தனது காதலியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு மூன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நபர், ஜாமீனில் வெளிவந்த பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். குற்றம் நடந்த பின்னர் நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வினை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதால், இதுபோன்ற கொடூரமான குற்றத்திற்காக தண்டனை அளிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை’ என்று தீர்ப்பளித்தார்.