மீனம்பாக்கம்: சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை ஆபரேஷன் காவேரி திட்டத்தின் மூலமாக ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில் சூடான் நாட்டில் மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 10 பேர் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களில் தஞ்சையை சேர்ந்த 5 பேர், கோவையை சேர்ந்த 2 பேர், மதுரையை சேர்ந்த 2 பேர், சென்னையை சேர்ந்த ஒருவர் என குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வெளிநாடுவாழ் தமிழர் நலவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர் அவர்களை அரசு அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நிருபர்களிடம் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ‘சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு, தாயகம் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 257 பேரை ஒன்றிய அரசின் உதவியுடன் தமிழ்நாடு அரசு மீட்டு, பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். மேலும், அங்கு பாதிக்கப்பட்ட தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில், அரசின் சார்பில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மீட்பு பணிகள் நடைபெறும்’ என்றார்.