சென்னை: அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான ‘45வது மகளிர் விளையாட்டுப் போட்டி’களை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் 12ம் தேதி (நாளை) வரை என மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் இறகுப்பந்து, மேசைப்பந்து, சதுரங்கம், கேரம் மற்றும் வளைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.
போட்டிகளில், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஆந்திரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் உமாதேவி, இயக்குநர் மலர்விழி, தலைமைப் பொறியாளர்கள் சுகுமார், இந்திராணி, சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.