டெல்லி: ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார். டெல்லியில் நேற்று இலங்கை அணியுடனான போட்டியின்போது விரலில் காயம் ஏற்பட்டதால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 38வது லீக் போட்டியில் நேற்று இலங்கை – வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டி டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ங்கதேச அணி களமிறங்கியது. வெகு விரைவாக தொடக்க ஆட்டக்காரர்களை இழந்த வங்கதேச அணியை நஜ்முல் ஹொசைன் சாண்டோ, கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இணைந்து மீட்டனர்.
பேட்டிங்கின்போது ஷகிப் அல் ஹசனுக்கு இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. காயம் குறித்து அந்த அணியின் பிசியோ, பைஜெதுல் இஸ்லாம் கான் தெரிவிக்கையில்; ஷாகிப் தனது இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அவரது இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் டேப்பிங் மற்றும் வலி நிவாரணிகளுடன் தொடர்ந்து பேட்டிங் செய்தார்.
இதையடுத்து விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆட்டத்திற்குப் பிறகு டெல்லியில் அவருக்கு அவசர எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. குணமடைய மூன்று முதல் நான்கு வாரங்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என பிசியோ தெரிவித்தார்.
இதன் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விலகினார். ஷாகிப் 65 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து இலங்கைக்கு எதிராக தனது அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.