மதுராந்தகம், மே 16: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் உட்பட பல்நோக்கு பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள் இருவர், காயமடைந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காலில் தையல் போட்டுள்ளனர். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு சுகாதார நல பணிகள் இணை இயக்குனரிடம் கேட்டபோது, இது குறித்த புகார் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டிருக்கிறோம். தற்போது, விசாரணை நடந்து வருகிறது. பின்னர், சுகாதார பணியாளர்களை தையல் போட சொன்னது யார், என்று தெரிந்த பின்னர் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.