உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி தொடங்குகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்தல புராணத்தை உணர்த்தும் விழாவான கந்தசஷ்டி திருவிழா வரும் 13ம்தேதி தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.
காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. பின்னர் மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 6ம் திருநாளான வரும் 18ம் தேதி மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி, விழாவின் சிகர நிகழ்ச்சியான கோயில் கடற்கரை வளாகத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது.
7ம்திருநாள் 19ம்தேதி அதிகாலை 3மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், திருக்கோயிலில் இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.